பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சனிக்கிழமை இரவு கோழி இறைச்சிக் கடை வியாபாரி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பாபநாசம் அருகே அம்மாபேட்டை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் உதயக்குமார் (30). இவர் அம்மாபேட்டை சந்தைப் பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வந்தார்.
இவர் சனிக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தார். அப்போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 மர்ம நபர்கள் இவரைச் சூழ்ந்து கொண்டு அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த உதயகுமார் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் தொழில் போட்டி காரணமாக நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர் அது தொடர்பாக சிலரை தேடி வருகின்றனர்.