ஊத்தங்கரை அருகே 5 மாத பெண் குழந்தை தண்ணீர் டிரமிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து கல்லாவி காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அம்மன்கோவில்பதி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் - ஷோபனா தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர், இதில் முதல் குழந்தை ஆண் குழந்தை, இரண்டாவதாக பிறந்தது பெண் குழந்தை தேவதர்ஷினி வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தந்தை வேடியப்பன் பணியின் காரணமாக வெளியில் சென்றிருந்த நேரத்தில் தாய் ஷோபனா அக்கம்பக்கத்தினரிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
திடீரென வீட்டில் இருந்த குழந்தையை காணவில்லை என்று பதறியடித்து அருகே இருக்கக்கூடிய உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்களிடம் விசாரித்ததில் குழந்தை எங்கும் இல்லாததால் விரக்தி அடைந்து கடைசியாக தன் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் மூடிய நிலையில் இருந்த தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது அதில் தேவதர்ஷினி சடலமாக இருப்பதைக் கண்ட தாய் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கல்லாவி காவலர்கள் குழந்தை இறந்ததற்கான காரணம் குறித்தும் மேலும் குழந்தை கொலை செய்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.