புதுச்சேரி: புதுவையில் புதிதாக 67 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவல்:
புதுச்சேரியில் புதன்கிழமை 687 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 57 பேர், ஏனாமில் 10 பேர் என மொத்தம் 67 பேருக்கு (9.8 சதவீதம்) கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 32 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 பேர் ஜிப்மரிலும், 16 பேர் கோவைட் கேர் சென்டரிலும், 10 பேர் ஏனாமிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் 53 பேர், ஏனாமில் 7 பேர் என 60 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கரோனாவால் புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவரும், ஜிப்மரில் 2 பேரும் என 3 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 360 பேரும், ஜிப்மரில் 132 பேரும், கரோனா கேர் சென்டரில் 111 பேரும், காரைக்காலில் 42 பேரும், ஏனாமில் 18 பேரும், மாஹேவில் 20 பேரும் என 686 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.