ஊழியர்கள் இருவருக்கு கரோனா: நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் மூடல்
நாமக்கல்: நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் சீல் வைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 215 பேர் தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 74 பேர் தவிர மீதமுள்ளவர்கள் குணமடைந்து விட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளம் ஆகியவை சீல் வைக்கப்பட்டது. அங்குள்ள அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மகளிர் திட்ட அலுவலகத்திலும், மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்திலும் அமர்ந்து பணியாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளி நபர்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.