திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 17 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, ரூ.36 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம், சாத்தனூர், வடகோவனூர், புள்ளமங்கலம், கோம்பூர், திருராமேஸ்வரம், பழையனூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 17 குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டன.
கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு, தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவரும், மன்னார்குடி ஒன்றியக் குழு பெருந்தலைவருமான டி.மனோகரன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கத் தலைவர் டி.எம்.பஷீர் அஹம்மது முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் டி.மனோகரன் கடன்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களை சங்கச் செயலாளர் வி.எஸ்.வெங்கடேசன் வழங்கினார். நிகழ்ச்சியில், செயலாளர்கள் மன்னார்குடி டி.செந்தில்குமார், நீடாமங்கலம் டி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.