காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான 200 கோடி மதிப்பிலான நிலம் அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை கடந்த 1900ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த கலவல கண்ணன் அறக்கட்டளை வாங்கி அதில் மேல்நிலைப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தது.
99 ஆண்டுகள் குத்தகைக்கு பெறப்பட்ட சென்னை கீழ்ப்பாக்கம் முதல் பூந்தமல்லி சாலையில் இருந்த இந்த இடத்தை மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் சம்பந்தப்பட்ட காலம் முடிந்தவுடன் ஒப்படைக்காமல் இருந்து அறக்கட்டளை நிர்வாகம் இருந்து வந்தது.
இதுதொடர்பான வழக்கு முடிந்துவிட்டதால் சம்பந்தப்பட்ட கோவில் இடத்தை மீட்குமாறு இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் காஞ்சிபுரத்தில் உள்ள அறநிலையத்துறை துறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
அரசின் உத்தரவைத் தொடர்ந்து காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி தலைமையில் ஏகாம்பரநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் நாகராஜன் கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பொன்ராஜ், வருவாய் ஆய்வாளர் ராஜா மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அந்த இடத்தை பூட்டி சீல் வைத்து கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி கோவில் செயல் அலுவலரான தியாகராஜன் கூறுகையில்,
”99 ஆண்டுகள் கலவல கண்ணன் அறக்கட்டளை கோவில் இடத்தை குத்தகைக்கு வாங்கி இருந்தது. குறிப்பிட்ட காலம் முடிந்ததால் அதை திருப்பி ஒப்படைக்காமல் அந்த இடத்தில் அறக்கட்டளை இருந்து வந்தது.
அதில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது இந்த நிலையில் இடத்தை காலி செய்யுமாறு அறநிலையத்துறை செயலாளரின் அரசு உத்தரவின்படி அந்த இடம் மீட்கப்பட்டு அங்கு கோவிலுக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூபாய் 200 கோடி” எனவும் கோயில் செயல் அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.