தேவாரத்தில், கரோனாவால் மனைவி, பிள்ளைகளை பிரிந்த நியாய விலைக் கடை தற்காலிக ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தேவாரம் பழைய மின்வாரிய தெருவில் வசிப்பவர் முருகன் (வயது50). இவர் தேவாரம் கூட்டுறவு சொசைட்டி நியாய விலைக் கடையில் கடந்த பல வருடங்களாக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி நீலாவதி (47). இவர் கேரளத்தில் உள்ள ஏலத்தோட்டத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் கோவாவில் ஒரு நிறுவனத்தில் தங்கி வேலைசெய்து வருகிறார். கரோனா பரவல் காரணமாக இருவரும் தேவாரத்திற்கு வரமுடியவில்லை.
முருகனின் மகளும் திருமணமாகி போடியில் உள்ளார். இதனால் தனிமையில் இருந்து வந்த முருகன் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார்.
இந்நிலையில் வீட்டில் தன் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த முருகன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து கேரளத்திலிருந்து வந்த நீலாவதி கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.