பென்னாகரம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை பென்னாகரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பென்னாகரம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முனியப்பன் (52). இவர் அருகில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவருக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரின் மனைவி இறந்ததால் கிருஷ்ணாபுரம் எம்.கே.எஸ் நகர் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு முனியப்பனுக்கு அவரது மகன் வேலன் (45) ஆகியோர்களின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மது போதையில் இருந்த அவரது மகன் வேலன் ஆத்திரமடைந்து முனியப்பனை கட்டை மற்றும் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் முனியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் வெள்ளிக்கிழமை காலை தனது உறவினர்களிடம் தந்தையை அடித்துக் கொன்றதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து உறவினர்கள் பென்னாகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின்பேரில் அங்கு வந்த காவலர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மது போதையில் தந்தையை அடித்துக் கொன்ற வேலனை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.