கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மாண்டியா, சாம்ராஜ் நகர் மற்றும் கேரளாவின் வயநாடு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.
கர்நாடக அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக - காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 7,200 கன அடியாக வந்து கொண்டிருந்த நிலையில், திங்கட்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 7,700 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருந்தது.
மேலும், 2 மணி நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்கானித்து வருகின்றனர்.