ராமேசுவரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் சிறப்பு முகாம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த மாற்று திறனாளிகளுக்கு இருக்கை வசதிகள் செய்துகொடுக்காமல் இருந்ததால் அவதிக்குள்ளாகினார்.
கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாற்று திறனாளிகளுக்கு தமிழக அரசு ரூ 1000 வழங்கி வருகிறது.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் 20 சதவீதம் பேர் அரசின் நிவாணரம் வழங்கவில்லை. இதனால் மாவட்டம் முழுவதிலும் சிறப்பு முகாம் நடத்தி மாற்று திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ராமேசுவரம் தாலுகாவில் உதவித்தொகை பெற முடியாத நிலையில் உள்ள மாற்று திறனாளிகள் உதவித்தொகை மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கிடும் வகையில் தாலுகா அலுவலகத்தில் சிறப்பு முகாம் திங்கட்கிழமை மாவட்ட மாற்று திறனாளிகள் அலுவலர் செந்தில்குமாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாற்று திறனாளிகளின் உடல் தகுதி குறித்த மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவர்கள் ஒருவர் மட்டுமே வந்திருந்தார். மாற்று திறனாளிகள் அலுவலகத்தில் இருந்து எழுத்து பணி மேற்கொள்ள இரண்டு பேர் இருந்தனர். இதனால் மாற்று திறனாளிகள் உடல் ஊனம் குறித்து மதிப்பீடுவதில் மூன்று மணிநேரம் ஆனது.
இந்நிலையில் மாற்று திறனாளிகள் வெயிலிலும், அங்கிருந்த மரத்தடி நிழலிலும் இருந்தனர். சிறப்பு முகாம் நடத்துவதற்கு முன் மாற்று திறனாளிகள் அமர்ந்து இருக்க இருக்கை வசதிகள், பந்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யவில்லை.
இதனால் மாற்று திறனாளிகள் அவதிக்குள்ளாகினர். சிறப்பு முகாம் ஏற்பாடு செய்வதற்கு முன் மாற்று திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அதிகாரிகள் செய்துகொடுக்க வேண்டும் என மாற்று திறனாளி ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார்.