தேனி மாவட்டம் கம்பம் தெற்கு காவல் நிலையம் முன்பு ஓய்வுபெற்ற சார்பு ஆய்வாளர், செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் கூடலூர் தெற்கு காவல் நிலையத்தில் பணியாற்றியவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆரோக்கியசாமி.
இவர் தற்போது விருப்ப ஓய்வில் கம்பம் மணிநகரத்தில் குடியிருந்து வருகிறார். இவரது மகன் நிர்மல்குமார் பொறியியல் பட்டதாரி. கம்பத்தில் பலரிடம் தொழில் செய்வதற்காக கடன் வாங்கியுள்ளார். பணத்தை திரும்ப செலுத்த முடியவில்லை.
இதனால் ஓய்வுபெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆரோக்கியசாமியிடம் பணம் கொடுத்தவர்கள் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த ஜூலை 20ஆம் தேதி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் ஆரோக்கியசாமி புகார் கொடுத்துள்ளார்.
புகார் மனுவை விசாரித்த காவல் ஆய்வாளர் கீதா, கடன் கொடுத்தவர்களிடம், பணம் கேட்டு தொல்லை தரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து, மனு விசாரணையை முடித்துள்ளார்.
இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் மீண்டும் ஆரோக்கியசாமிக்கு, நெருக்கடி கொடுக்கவே இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு தபால் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில் செவ்வாய்க்கிழமை தான் அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்காததால் தீ குளிக்கப் போகிறேன் என்று கூறி கம்பம் தெற்கு காவல் நிலையம் முன்பாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றார்.
அப்போது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விரைந்து வந்து மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி ஆரோக்கியசாமி மீது தண்ணீரை ஊற்றி அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.