தமிழக மலைவாழ், பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, 4 மாதங்களுக்குத் தேவையான ரேசன் பொருட்களை இலவசமாக வழங்கவும், தலா 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “மலைவாழ் பழங்குடியின மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதாகவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பழங்குடியின குழந்தைகள் வேறு வேலைக்கு செல்கின்றனர்” என்பதை ஆங்கில நாளிதழை சுட்டிக்காட்டி தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், அரசு தொடர்ந்து நான்கு மாதம் இலவச அரிசி மற்றும் 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பழங்குடியினர் உள்ள பகுதிகளுக்கு தமிழக அரசு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை மூன்று வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.