முகப்பு தற்போதைய செய்திகள்
அரசு ஊழியர்கள் சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
By DIN | Published On : 29th July 2020 01:31 PM | Last Updated : 29th July 2020 01:31 PM | அ+அ அ- |

தான், தன் குடும்பம், உறவு, நட்பு என அரசு ஊழியர்கள் இருக்கக் கூடாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
மதுரை: அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தின் நலனை குறித்தும் மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ராதானூரைச் சேர்ந்த வாசு, ராதனூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் அருகே உள்ள ஓடைக்கல் கிராம உதவியாளராக அண்மையில் இடமாறுதல் செய்யப்பட்டார். இதை ரத்து செய்து தன்னை மீண்டும் ராதானூர் கிராம உதவியாளராக நியமிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வாசு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஓடைக்கல் கிராமத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் சாதியினர் தன்னை மிரட்டுவதாக மட்டும் தெரிவித்துள்ளார். இந்த காரணத்தை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் எந்த கிராமத்திலும் மாற்று சாதியினர் பணிபுரிய முடியாது.
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சலுகையில் கரோனா காலத்தில் ஒரு பைசா கூட குறைக்கப்படவில்லை. ஆனால் தினக்கூலி தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்து வாழ்க்கை நடத்த போராடி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் அரசு ஊழியர்கள் அனைத்திலும் முன்களப்பணியாளராக இருந்து உழைக்க வேண்டும். அரசு ஊழியர்கள் தான், தன் குடும்பம் மற்றும் உறவினர்களின் நலனை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூக நலன் குறித்தும் சிந்திக்க வேண்டும் என அறிவுரையை வழங்கிய நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.