ஓமலூர் வட்டார பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் ஏரி குளங்களுக்கு தண்ணீர் வரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும், சேர்வராயன் மலைத்தொடரின் சரபங்காநதி மற்றும் கால்வாய் பகுதிகளில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக காடையாம்பட்டி அருகே உள்ள சேர்வராயன் மலையை ஒட்டியுள்ள டேனிஷ்பேட்டை ஊராட்சி உள்கோம்பை பகுதியில் உருவாகும் சரபங்கா நதியிலும், ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்களிலும் குறைந்தளவிலான தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் சேர்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக போதுமான மழை பெய்தது. இதன் காரணமாக கால்வாய்களில் மழைநீர் அதிகரித்து டேனிஷ்பேட்டை ஏரி முழுமையாக தண்ணீர் நிரம்பியுள்ளது.
மேலும், இந்த ஏரியை தொடர்ந்து கோட்டை ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஓமலூர் வட்டார கிராமங்களில் உள்ள ஏரிகள் நிரம்பி வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது நிரம்பியுள்ள ஏரியால் அந்த பகுதியில் உள்ள சுமார் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து நூற்றுக்கனக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் என்பதால் அந்த பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் நிரம்பி வழியும் ஏரிகளில் சிறுவர்கள் நீச்சலடித்து வருகின்றனர்.