திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையோரக் கிணற்றில் தவறி விழுந்த நாய்-பூனையை தீயணைப்புத்துறையினர் வியாழக்கிழமை உயிருடன் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் ஒன்றியத்திற்கு உள்பட்ட சூரியநல்லூர் கிராமத்தில் பழைய நவ கொம்பு பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக விவசாயி ஒருவருக்குச் சொந்தமான கிணறு உள்ளது.
இந்தக் கிணறு பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்தக் கிணற்றில் நாய் ஒன்றி தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை அந்த வழியாகச் சென்றவர்கள் வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தாராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலின்பேரில் தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 30 அடிக்கு வளர்ந்திருந்த ஆலமர வேறில் நாய் மாட்டிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாயை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். அப்போது கிணற்றின் மற்றொரு பகுதியில் சிக்கித் தவித்த பூனை ஒன்றையும் கயிறு கட்டி மீட்டனர்.
இதையடுத்து, மீட்கப்பட்ட நாய் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் அதே பகுதியில் விடுவித்தனர். மேலும், பூனையை அப்பகுதியில் இருந்த சிறுவன் தன் வளர்த்து வந்தது என்று எடுத்துச் சென்றார்.
குண்டடம் பகுதியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாய், பூனையை மீட்ட தீயணைப்புத்துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.