சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 97 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்த தினத்தை தமிழகம் முழுவதும் கொண்டாட திமுகவினர் தயாராகி உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருணாநிதியின் உருவப்படம் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த செல்லும் போது, அணிதிரள வேண்டாம் என்றும், கருணாநிதி பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம், தேவையானவர்களுக்கு நிவாரண உதவி வழங்குங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 97 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் திமுக பொருளாளர் துரைமுருகன், மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிடோரும் மரியாதை செலுத்தினர்.
பின்னர், கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து திமுக தொண்டர் அசோக்குமார் - மகாலட்சுமி திருமணத்தை நடத்தி வைத்தும் புதிய தம்பதிக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.