தஞ்சாவூர்: பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.7,500 நிவராணம் வழங்கக் கோரி தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இடங்களில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா கால பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து வாழும் ஏழை விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நூறு நாள் வேலையை 200 நாள்களாக உயர்த்தி ரூ. 600 கூலி வழங்க வேண்டும். நூறு நாள் வேலையில் வயது வரம்பைக் கைவிட்டு, 60 வயது வரையுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை அட்டை இல்லாதவர்களுக்கு அட்டை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியச் செயலர் கே. அபிமன்னன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலர் எம். மாலதி, சிஐடியு மாவட்டத் தலைவர் டி. கோவிந்தராஜ், துணைச் செயலர் கே. அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, அம்மாபேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி உள்பட 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.