தேனி மாவட்டம், லோயர்கேம்ப் தமிழக எல்லையில் உள்ள கரோனா பரிசோதனைச் சாவடியில், கழிப்பறை வசதியின்றி பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கேரளத்திலிருந்து தற்போது தினமும் 300-க்கும் மேற்பட்ட பயணிகள் இ-பாஸ் பெற்று தமிழகத்திற்கு வருகின்றனர். இவர்களுக்கு லோயர் கேம்ப் தமிழக எல்லையில் உள்ள கரோனா பரிசோதனை சாவடியில் பரிசோதிக்கப்பட்டு, அதன் முடிவுகளுக்கு ஏற்ப சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர். கேரளத்திலிருந்து தினமும் காலை 6 மணி முதல் பயணிகள் தமிழகத்திற்கு வர தொடங்கி விடும் நிலையில், காலை 11.30 மணிக்கு இவர்களுக்கு கரோனா பரிசோதனை நடைபெறுகிறது. இதன் முடிவுகள் மாலை 6 மணிக்கு தெரிவிக்கப்படுகிறது.
அதுவரை பயணிகள் கரோனா பரிசோதனை சாவடியிலேயே தங்க வைக்கப்படுகின்றனர். கரோனா பரிசோதனை சாவடியில் அமைக்கட்டுள்ள தற்காலிக கழிப்பறை சுத்தப்படுத்தாமல், பயன்படுத்த முடியாத நிலையில், மூடி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், இங்கு கேரளத்திலிருந்து வந்து, 12 மணி நேரத்திற்கு மேல் பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் பெண்கள், முதியோர், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் கழிப்பறை வசதியின்றி தவித்து வருகின்றனர். லோயர் கேம்ப் கரோனா பரிசோதனை சாவடியில் பயணிகளுக்கு கழிவறை வசதி செய்து தர தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.