ஈரோடு: திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி மேடை அலங்காரம் செய்பவர்கள் ஈரோட்டில் பொதுமக்களுக்கு பூ வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம் சார்பில் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகள் நடத்த வழிமுறைகளுடன் அனுமதி வழங்கக்கோரி ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்களுக்கு பூ வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்க ஒருங்கிணைப்பாளர் பி.சுப்பிரமணியன் கூறியதாவது: கரோனாவுக்கான பொது முடக்கம் காரணமாக, திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் மேடை, அலங்காரம், ஒலி, ஒளி அமைத்தல் என பல்வேறு தொழில் சார்ந்தவர்கள், தொழிலாளர்கள் பல லட்சம் பேர் தொழிலையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
தற்போது அரசு சார்பில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விதிமுறைகளுடன் அனுமதி வழங்க வேண்டும். தனி மனித இடைவெளி பின்பற்றுதல் பாதுகாப்பு வழங்குதல், குளிர்சாதனம் பயன்படுத்தாமல் இருத்தல், கிருமி நாசினி தெளித்தல், 200 பேர் அமரும் மண்டபத்தில் 100 பேர் அமர்ந்து திருமணம் நடத்த அனுமதிக்கலாம்.
6 நபர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்தில் 3 பேர் அமர்ந்து சாப்பிட அறிவுறுத்தலாம். இதுபோல் டெக்கரேட்டர், கேட்டரிங், பூமாலை, பாத்திரம், பத்திரிக்கை, தாம்பூலம், வரவேற்பு, ஒப்பனைக் கலைஞர்கள், புரோகிதர் என அனைவரும் விதிகளின்படி செயல்படும்படி கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளிக்கலாம் என்றார்.