திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே ஊர் பொதுக்கிணற்றில் இருந்து ஆண் சடலத்தை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னிவாடி கிராமம் உச்சன் வலசைச் சேர்ந்தவர் கே.செல்வராஜ்(41), இவர் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது பெற்றோரும், உறவினர்களும் செல்வராஜைத் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் ஒரு ஆணின் சடலம் மிதப்பதை அருகில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர்.
இதுகுறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் மூலனூர் காவல் நிலையத்துக்கும், தாராபுரம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி செல்வராஜின் சடலத்தை 2 மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர் மீட்டனர்.
இதுகுறித்து மூலனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.