சிதம்பரம்: சிதம்பரம் சபாநாயகர்தெருவில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் 110 பேருக்கு மளிகைப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு மன்ற நிர்வாகி அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் டிஎஸ். ஞானக்குமார் தலைமை வகித்தார். அரசு சித்தமருத்துவர் எம்.எம்.அர்ச்சுனன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திகேயன் பங்கேற்று 110 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை நிவாரணமாக வழங்கி பேசுகையில், ஆட்டோ ஓட்டுநர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஊரடங்கு தடை உத்தரவில் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் இழந்து அதிகம் பாதித்து இருப்பதை நான் அறிந்திருக்கிறேன்.இன்னும் பல உதவிகள் உங்களுக்கு செய்ய உள்ளேன் என்றார் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன்.
நிகழ்ச்சியில் தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நிதி ஒதுக்கீடு பரிந்துரை கமிட்டி உறுப்பினர் முனைவர் தில்லை சீனு, சமூக ஆர்வலர் அருண் விஜய், ஆட்டோ சங்க பொறுப்பாளர்கள் முத்து, சுப்பு வெங்கடேசன், ராமச்சந்திரன், சேட்டு ஆகியோர் பங்கேற்றனர்.
உதவியை ஆட்டோ ஓட்டுநர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து பாராட்டினார்கள்.