எல்லைப் பாதுகாப்பு பணியின்போது வீரமரணம் அடைந்த பாதுகாப்புபடை வீரரின் உடல் இன்று சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட உள்ளது.
எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சித்தூர் ஊராட்சி, வெற்றிலைக்காரன்காடு, இப்பகுதியை சோந்த பெத்தா கவுண்டர்- ராமாயி தம்பதியின் மூத்த மகன்
மதியழகன் (40) இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல், இந்திய எல்லைப் பாதுகாப்பு படையில் முதல் நிலை ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது தனது சொந்த ஊருக்கு வந்திருந்த மதியழகனுக்கு, காஷ்மீர் மாநிலம் ரஜோரிப்பகுதியில் எல்லைக் கண்காணிப்பு பணியில் பணி ஒத்துக்கீடு செய்து, உத்தரவு வந்த நிலையில் அவர் உடனடியாக அப்பகுதிக்கு சென்று, ராணுவப் பாதுகாப்பு பணியினை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று எல்லைக்கட்டுப்பாட்டுக்கோடு பதியில், பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய திடீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். ராணுவவீரர் மதியழகன். உடல் தலைநகர் தில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு கொண்டுவரப்பட்டு, இன்று மாலை அவரது சொந்த ஊரான, சித்தூர், வெற்றிலைக்காரன்காடு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில், வைக்கப்பட்ட இறுதி மரியாதை செய்தபின், தகனம் செய்யப்பட உள்ளது.
பள்ளி பருவத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், ஆர்வம் காட்டி வந்த மதியழகன், பள்ளி படிப்பினை முடித்த நிலையில், கடந்த 15.1.1999 முதல் இந்திய ராணுவப்பணியில் சேர்ந்து தீரமுடன் பணியாற்றி வந்தார். மேலும் அவர் ராணுவப்பணியின்போதே, தொலைக்கல்வியின் மூலம் இளங்கலைப்பட்டம் பெற்றுள்ளார்.
பாதுகாப்பு பணியில் வீரமரணம் அடைந்த மதியழகனுக்கு தமிழரசி என்ற மனைவியும், ரோகித்(12) என்ற மகனும் சுபஸ்ரீ(8) என்ற இரு குழந்தைகளும்
உள்ளனர். எல்லை பாதுகாப்பு பணியில் மதியழகன் வீரமரணம் அடைந்த செய்திக்கேட்டு, அவரது சொந்த கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.