வாஷிங்டன்: அமெரிக்காவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 19,88,544 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த தொற்று பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆய்வு அமைப்புகள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் தினம் தினம் புதிதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்து வருகின்றனர். சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 4,02,170 லட்சத்தை தாண்டி உள்ளது.தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 69,76,045 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,11,784 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், உலகில் கரோனா தொற்று பலி எண்ணிக்கையில் ஒரு லட்சத்தைத் தாண்டிய ஒரே நாடு அமெரிக்காதான். அங்கு சில தினங்களாக பலி எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தாலும், இதுவரை 1,12,096 பேர் பலியாகியுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,88,545 ஆக உயர்ந்துள்ளது, தொற்று பாதிப்பில் இருந்து 7,51,897 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் 11,24,552 பேர்களில் 17,021க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.