தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு உக்கடையில் குளம் தூர்வாரும் பணியின் போது முதுமக்கள் தாழிக்கான அடையாளம் தென்பட்டதால் தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கட்டயங்காடு உக்கடை கிராமத்தில் அய்யனார் கோவில் குளம் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் போது குளத்திற்குள் முதுமக்கள் தாழிக்கான அடையாளம் ஐந்திற்கும் மேற்ப்பட்ட இடங்களில் தென்பட்டது. இதையடுத்து தூர்வாரும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்களுக்கு கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர்.
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் துறை ஆய்வு மாணவர் கார்த்திகேயன் அங்கு வந்து ஆய்வு நடத்தினார். இக்குளத்தில் இதேபோல் சுமார் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் முதுமக்கள் தாழி புதைந்து இருக்கலாமெனவும் கூறப்படுகிறது.
மேலும் முதுமக்கள் தாழி சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு அய்யனார்குளம் பகுதியில் புதையுண்டு கிடக்கும் முதுமக்கள் தாழியை பார்வையிட்டார். பின்னர் கிராம மக்களிடம் விபரங்களை கேட்டறிந்து முழுமையாக ஆய்வு நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.