கரோனோ தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு புதுச்சேரி முதல்வர் வே.நாராயணசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கரோனா தொற்றால் அன்பழகன் இறந்த செய்தி அதிர்ச்சியையும், மன வருத்தத்தையும் அளிக்கிறது.
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் போதும், கூட்டணி கட்சிகளின் மேடையில் பங்கேற்றபோதும் அன்பழகனுடன் பழக வாய்ப்பு கிடைத்தது.
ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவர். கட்சித் தொண்டர்களின் அன்பை பெற்றவர். கரோனா காலகட்டத்திலும் தன் உடல் நிலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நலன் கருதி உழைத்தவர்.
அவரது இழப்பு திமுக தலைவர் ஸ்டாலின், கட்சித் தொண்டர்கள், அவரது குடும்பத்தினர் ஆகியோருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் முதல்வர் நாராயணசாமி.