ஈரோடு: ஈரோட்டில் புதன்கிழமை தனியார் பேருந்துகள் இயக்கபடவில்லை. நாளை வியாழக்கிழமை முதல் இயக்க திட்டமிட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கரோனா வைரஸ் பரவுவதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அரசு பேருந்துகள் தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள் சேவை முடக்கப்பட்டது . இதே போன்று மினி பேருந்து சேவையும் முடக்கப்பட்டது. மூன்று மாதங்களாக பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், படிப்படியாக பொது முடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கின. 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேருத்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதன்படி ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர் ஆகியவை ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டு இந்தப் பகுதிக்குள் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை நாள் ஒன்றுக்கு 800 பேருத்துகள் இயக்கப்பட்டு வந்தது தற்போது 280 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதே சமயம் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படாமல் இருந்தன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 270 தனியார் பேருந்துகள் உள்ளன.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் புதன்கிழமை முதல் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. 50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பேருந்துகள் இயங்கிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. நாளை வியாழக்கிழமை முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பேருத்துகள் இயங்கும் என ஈரோடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
தாராபுரம், சேலம், நாமக்கல், கரூர், கோவை, மேட்டூர் போன்ற பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை தனியார் பேருந்துகள் இயக்கப்படும். அதே சமயம் சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து ஈரோடுக்கு தனியார் பேருந்துகள் வந்தன.