மணப்பாறையில் அவசர சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில், காவலர்களுடன் போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 13 பேரை காவலர்கள் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கடுமையாக விவசாயிகளை பாதிக்கும் அத்தியாவசிய பொருட்கள் மீதான அவசர சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, சட்ட நகல் எரிப்பு போராட்டம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
முன்னதாக காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். கண்டன ஆர்ப்பட்டமாக தொடங்கிய போராட்டத்தில், மத்திய அரசை கண்டித்தும், அவசர சட்டத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. அப்போது சட்ட நகலை எரிக்க முயன்ற ஒரு நபரை காவலர்கள் தடுத்து நிறுத்தியதில், போரட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருத்தரப்பினருக்குமிடையே கடுமையான வாக்குவாதமும் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் வாகனத்தில் மீண்டும் சட்ட நகல் எரிக்க முயற்சி நடைபெற்றதும், காவலர்கள் தடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.