திருச்சுழி அருகே சித்தனேந்தல் கிராமத்தில் இடப்பிரச்னை காரணமாக அ.முக்குளம் காவல் நிலையம் சென்ற இளைஞரைக் காவலர்கள் தாக்கியதால் மனமுடைந்த வாலிபர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சித்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான சுப்ரமணியன், கிருஷ்ணன் ஆகியோரின் இடப் பிரச்னைக்காக செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) அ.முக்குளம் காவல் நிலையம் சென்றதாக கூறப்படுகின்றது.
அவர்களுடன் முருகன் என்பவரும் உடன் சென்றுள்ளார். அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் முருகனைக் காவலர்கள் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்ததால் காரியாபட்டி மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
அ.முக்குளம் காவலர்கள், விசாரணை, வழக்கு மற்றும் புகார் அளிக்க செல்பவர்களை அடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது காவலர்களின் அராஜகத்தை காட்டுவதாக இந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபோன்று ஒரு சில காவலர்கள் நடந்து கொள்வதால் பொதுமக்களுக்கு காவலர்கள் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.