சென்னையில் அதிகபட்சமாக, ராயபுரத்தில் 5 ஆயிரத்து 626 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகரில் பாதிப்பு எண்ணிக்கை 3,160 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுக்கு பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் கரோனாவுக்கு இன்று வியாழக்கிழமை மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை 12 பேர் பலியாகியுள்ளனர். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூன்று பேரும், தனியார் மருத்துவமனைகளில் இரண்டு பேரும் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, 35 ஆயிரத்து 556 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 19 ஆயிரத்து 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 461 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 5 ஆயிரத்து 626 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4 ஆயிரத்து 549 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டை மண்டலத்தில் 4 ஆயிரத்து 549 பேரும், கோடம்பாக்கத்தில் 3 ஆயிரத்து 801 பேரும், அண்ணாநகரில் 3 ஆயிரத்து 636 பேரும், திரு.வி.க.நகரில் 3 ஆயிரத்து 160 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடையாறு மண்டலத்தில் 2 ஆயிரத்து 069 பேருக்கும், வளசரவாக்கத்தில் 1,497 பேருக்கும், திருவொற்றியூரில் 1,324 பேருக்கும், அம்பத்தூரில் 1,243 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதவரத்தில் 955 பேரும், ஆலந்தூரில் 736 பேரும், பெருங்குடியில் 684 பேரும், சோழிங்கநல்லூரில் 677 பேரும், மணலியில் 503 பேரும், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 762 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 60.20% பேர் ஆண்கள், 39.79% பெண்கள் ஆவர். 0.01% திருநங்கைகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.