திருச்சி: சீனப் பொருள்களை புறக்கணிப்போம், சீனாவின் செல்லிடப் பேசி செயலிகளை பயன்படுத்த மாட்டோம் என பாஜக சார்பில் வியாழக்கிழமை உறுதிமொழியேற்கப்பட்டது.
திருச்சியில் பாஜக இளைஞரணி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் எல். முருகன் கலந்து கொண்டு, பாஜக நிர்வாகிகளுடன் உறுதிமொழியேற்றார்.
இந்திய ராணுவப் படையின் மீது கோழைத்தனமாகத் தாக்குதல் நடத்தும் கம்யூனிச சீன அரசைக் கண்டிக்கும் வகையிலும், இந்திய ராணுவத்துக்கும் அவர்கள் எடுக்கும் துணிச்சலான ஒவ்வொரு முடிவுக்கும் துணை நிற்கவும்,
பிரதமர் நரேந்திர மோடிக்குகு ஆதரவு கரம் நீட்டும் வகையிலும் மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இனிவரும் நாட்களில் சீன நாட்டில் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருட்களையும் வாங்க மாட்டோம். சீன நாட்டின் செல்லிடப் பேசிகளையும், செயலிகளையும் பயன்படுத்த மாட்டோம். இந்தியத் திருநாட்டில்
தயாரிக்கப்படும் பொருட்களையே இனிமேல் அதிகமாகப் பயன்படுத்துவோம் என்றும் பாஜக இளைஞரணி சார்பில் உறுதிமொழியேற்கப்பட்டது. திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், இளைஞரணி மாநிலத் தலைவர் வினோஜ் பி. செல்வம், மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், கோட்ட அமைப்பாளர் சிவசுப்பிரமணியன், கோட்ட இணை அமைப்பாளர் இல. கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உறுதிமொழியேற்றனர்.