புதுதில்லி: ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆதரவு வழங்கிய உலக நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான காலியாக உள்ள 5 நாடுகளுக்கான தேர்தல் ஐ.நா. தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆசிய -பசிபிக் பிராந்தியம் சார்பில் இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் போட்டியிடாத நிலையில், இந்தியா வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 192 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை 128 ஆகும். இதில் 184 நாடுகள் இந்தியாவிற்கு ஆதரவாகவும், 113 நாடுகள் கென்யாவுக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளன. கனடா தோல்வியடைந்தது.
இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பொறுப்பில் இருக்கும்.
இந்நிலையில், ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் இந்தியா உறுப்பினராகத் தேர்வு செய்தமைக்கும், உலக நாடுகள் வழங்கிய ஆதரவுக்கு இந்தியாவின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் "இந்தியா அனைத்து உறுப்பு நாடுகளுடன் இணைந்து சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் சமத்துவம், நீதியை நிலைநாட்ட இந்தியா செயல்படும்" என பிரதமர் மோடி கூறி உள்ளார்.