திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த 60 வயதான அந்த முதியவர், திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பரிசோதனை செய்ததில் கரோனா இருப்பது தெரியவந்ததை அடுத்து கடந்த 14 ஆம் தேதி திருச்சி அரசு மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு ஏற்கெனவே காசநோய் மற்றும் நுரையீரல் தொற்று இருந்துள்ளது.
இந்தநிலையில், கரோனாவும் சேர்ந்து அவரது உடலை மோசமடையச் செய்துள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வழிகாட்டுதலின்படி பிரதேப் பரிசோதனை செய்து, உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஏற்கெனவே 70 வயது மூதாட்டி ஒருவர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி உயிரிழந்தார். இதேபோல, திருவள்ளூரிலிருந்து பெரம்பலூர் வந்து தொற்று உறுதியான 53 வயது ஆண் ஒருவர் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் காயமடைந்த திருச்சியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 12 ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று இருந்தது. இப்போது, 4 ஆவது நபராக திண்டுக்கலைச் சேர்ந்தவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.