தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து நகைகள், செல்லிடப்பேசிகள், வாகனத்தைத் திருடிச் சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாதாகோட்டை சாலை சுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (53). இவர் புதன்கிழமை இரவு வெப்பம் காரணமாக மாடியில் படுக்கச் சென்றார். வீட்டில் இவரது மனைவி, இரு மகன்கள், மகள் படுத்து தூங்கினர்.
வியாழக்கிழமை அதிகாலையில் எழுந்த தேவேந்திரன் மாடியிலிருந்து இறங்கி வீட்டுக்கு வந்தார். அப்போது முன்பக்கக் கதவு திறந்து கிடந்ததுடன், 5 பவுன் தங்கச் சங்கிலி, அரை பவுன் ஜிமிக்கி, 2 செல்லிடப்பேசிகள், வீட்டு வளாகத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவை திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.