நாமக்கல்: நாமக்கல்லில் வெட்டிய வாழை மரத்தில் இருந்து துளிர்விட்ட வாழைப்பூவை ஏராளமானோர் பார்த்து வியந்தனர்.
நாமக்கல் ஆண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தார்த்(27). இவர் தனது வீட்டு தோட்டத்தில் காய்கறி பயிர்கள் மற்றும் வாழை மரங்களை நட்டு வளர்த்து வருகிறார். இவரது தோட்டத்தில் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு 10க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நடப்பட்டன. இந்த வாழை மரங்களில் ஒன்று மட்டும் அழுகிய நிலையில் இருந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 2 அடி உயரத்தை விட்டு விட்டு மீதமுள்ளவற்றை வெட்டி விட்டார்.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன் அந்த வெட்டிய வாழை மரத்தில் இருந்து வாழைப்பூ நன்கு முளைத்து காணப்பட்டது. அடுத்த ஓரிரு நாள்களில் வாழைப் பூ வெடித்து காய்களும் தெரியவந்தது.
வெட்டிய வாழை மரத்தில்எளிதில் பூவோ, காய்களோ வராது. ஆனால் அதிசயத்தக்க வகையில் இங்கு வாழைப்பூ மற்றும் காய்கள் முளைத்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் பலர் வியப்புடன் பார்த்து சென்றனர்.