பெரம்பலூர்: பெரம்பலூரில் கடந்த 2 ஆம் தேதி அமமுக நிர்வாகி கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த அதிமுக -வைச் சேர்ந்த பெரம்பலூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரமேஷ் என்பவரை பெரம்பலூர் காவலர்கள் கைது செய்து சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பெரம்பலூர் சங்குப்பேட்டையைச் சேர்ந்த அமமுக நகர மாணவரணிச் செயலர் ராஜேந்திரன் மகன் பாண்டி (எ) வல்லத்தரசு (27). இவர், கடந்த 2 -ஆம் தேதி பெரம்பலூர் - விளாமுத்தூர் சாலையோரம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சம்பவத்தின் போது வல்லத்தரசுடன் இருந்து பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது நண்பர் சூர்யா அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த காவல்ரகள் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலையில் தொடர்புடைய 4 பேர் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் 4 பேரை பெரம்பலூர் காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் காவலர்களால் தேடப்பட்டு வந்த அதிமுகவைச் சேர்ந்த பெரம்பலூர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி. ரமேஷ் வெள்ளிக்கிழமை இரவு பெரம்பலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனிடம் நேரில் ஆஜரானார்.
இதையடுத்து, அவரை கைது செய்த காவலர்கள் சனிக்கிழமை காலை பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அசோக் பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தி ரமேஷை சிறையில் அடைத்தனர்.