வனப்பகுதியில் இருந்து நீர் தேடி விளைநிலத்திற்கு வந்த காட்டு மாடு கால்கள் ஒடிந்த நிலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றது. வனத்துறையினர் மருத்துவர் உதவியுடன் காட்டு மாட்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியின் கருங்கல்பாறை பகுதியில் உள்ள மாந்தோப்பிற்கு வெள்ளிக்கிழமை இரவு வனப்பகுதியில் இருந்து கூட்டமாக காடுமாடுகள் நீர் குடிக்க வந்த நிலையில் 6 வயதுடைய காளை காட்டு மாடு ஒன்று உயரமான நிலப்பகுதியில் இருந்து தாவிய போது காட்டு மாட்டின் முன்னங்கால் இரண்டும் ஒடிந்த நிலையில் பலத்த காயங்களுடன் விவசாயிகள் விளை நிலங்களுக்கு செல்லும் ஓடை சாலையில் உயிருக்கு போராடி வருகின்றது.
இதை அறிந்த அந்த பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து கால்நடை மருத்துவரின் உதவியுடன் ஒடிந்த கால்களுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காட்டு மாட்டின் முன்னங்கால்கள் இரண்டும் ஒடிந்துள்ளதால் காட்டு மாடு எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ளதால் அதனை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.