சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியில் மாநில நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
சங்ககிரியிலிருந்து ஈரோடு, பவானி செல்லும் சாலையை விரிவாக்கப்பணிகளுக்காக சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மீண்டும் அப்பகுதியில் மரக்கன்றுகளை நடமுடிவு செய்த சங்ககிரி மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சங்ககிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வரும் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பினரிடம் தெரிவித்தனர்.
அதனையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை, லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்புகள் இணைந்து சங்ககிரியிலிருந்து ஈரோடு, பவானி செல்லும் சாலைகளின் இரு புறங்களிலும் லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் எம்.சின்னதம்பி, பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு புளி, புங்கன், நீர்மருது, மந்தாரை உள்ளிட்ட 56 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் அதிகளவில் புளிய மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். மேலும் கால்நடைகளிலிருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க வேலி அமைத்து நீர் ஊற்றினர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் தேவராஜன், பசுமை கனகராஜ், பாலகுமார், பசுமை சீனிவாசன், காந்தி, துரைசாமி, கோவிந்தராஜ், அபி, யுவராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட மரங்களை விட கூடுதலாக மரக்கன்றுகளை நட்டுவைத்த மாநில நெடுஞ்சாலைத்துறை, லாரி உரிமையாளர்கள் சங்கம், பசுமை சங்ககிரி அமைப்பினரை பொதுமக்கள் பாராட்டினர்.