சீர்காழி: சீர்காழி அருகே மதுபாட்டில் விற்பனை செய்த ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தை கொள்ளையடிப்பதற்காக மர்ம நபர்கள் கல்லால் அடித்ததில் கார் கண்ணாடி உடைந்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் மண்டை உடைந்து பலத்த காயங்களுடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடைக்கண்விநாயகர் நல்லூர் கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை பூட்டி விட்டு டாஸ்மாக் மேற்பார்வையாளர் இளஞ்செழியனின் காரில், விற்பனையாளர் காமராஜ், கார் ஓட்டுநர் வெற்றிவீரன் உள்ளிட்ட மூன்று பேரும் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கொள்ளிடம் ரயில்வே கேட் வேகத்தடையில் கார் மெதுவாக ஏறும் போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள் கல்லால் அடித்ததில் காரின் முன்பக்க,பக்கவாட்டு கண்ணாடி உடைந்து முன்பக்கம் அமர்ந்திருந்த மேற்ப்பார்வையாளர் இளஞ்செழியனின் மண்டை உடைந்தது. இதில் பலத்த இரத்த காயம் அடைந்த அவரை கார் ஓட்டுநர் வெற்றி வீரன் காரை நிறுத்தாமல் ஓட்டி வந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இளஞ்செழியன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
காரில் மதுபாட்டில் விற்பனை செய்த ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து மர்ம நபர்கள் காரை இடைவிடாது தொடர்ந்து கல்லால் தாக்கி பின் தொடர்ந்து வந்துள்ளனர். கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வந்ததால் பணம் தப்பியது. கொள்ளிடம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.