வெள்ளக்கோவில்: விருதுநகர் மாவட்டம், சத்திரப்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டி (50). இவர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் கட்டட மேஸ்திரியாக உள்ளார். தற்போது கரூர் மாவட்டம், தென்னிலையில் வேலை செய்து வருகிறார்.
சம்பள நாளான ஞாயிற்றுக்கிழமை கட்டட முதலாளி சம்பளம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அவர் தென்னிலை காவல் நிலையம் பின்புறமுள்ள 150 அடி உயர பிஎஸ்என்எல் செல்போன் டவரின் உச்சிக்கு ஏறிச் சென்று குதித்து தற்கொலை செய்து கொள்வதாக சத்தம் போட்டார்.
தகவலின் பேரில் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கோபால், கணேசன், அருண்குமார் மூன்று பேரும் டவரில் ஏறினர். முதலில் ஏறிய கோபால் நைசாகப் பேசி கைகொடுத்து மேஸ்திரியை உச்சியில் இருந்து பாதுகாப்பாக கீழே இறக்கி வந்தனர்.
பின்னர் அவர் தென்னிலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.