மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக, மதிமுக, பாமக, திக மற்றும்  
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக, மதிமுக, பாமக, திக மற்றும் 
தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்துள்ள வழக்குகளின் விசாரணையை வரும் ஜூலை 9- ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு, டிப்ளமோ படிப்புக்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யக் கோரி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த கோரிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு மத்திய தொகுப்பிலிருந்து 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக, திக மற்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்குககளை விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவ மேற்படிப்புக்காக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்திருந்தது. அந்த பதில்மனுவில், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கொன்றில்,  மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசுகள் பின்பற்றக்கூடிய  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை பின்பற்ற மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அந்த இடஒதுக்கீடு ஏற்கனவே நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது.

மேலும் எஸ்.சி.,எஸ்.டி., உள்பட அனைத்து பிரிவினருக்குமான இடஒதுக்கீடு ஒட்டுமொத்தமாக 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதுதொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் வரும் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. தற்போது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள அரசியல் கட்சிகள் அந்த வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர்.அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன், 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நீட் தேர்வு நடைமுறைக்கு முன்பு தொடரப்பட்டது. எனவே இந்த வழக்குக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என வாதிட்டார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்  விசாரணையை வரும் ஜூலை 9- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com