காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்தவர்கள் வீட்டில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகர் முக்கியச் சாலையில் வசித்து வருபவர் செம்பையா மகன் செந்தில்குமார் (40). இவர் சிங்கப்பூர் நாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காரைக்குடி திரும்பியுள்ளார். இவர் மனைவி, 2 மகள்களுடன் காரைக்குடி வீட்டில் வசித்து வருகிறார். வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவுக்கு பின் 9 மணிக்கே தனி அறையில் குடும்பத்தினர் அனைவரும் உறங்கி விட்டனர். பின் இரவு நேரத்தில் சமையலறை ஜன்னல் பகுதியில் மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர்.
இதில் சமையலறை பொருள்கள், மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. பெட்ரோல் குண்டு வீச்சு தெரியாமல் வீட்டில் உறங்கியவர்களுக்கு அறையில் கருகிய வாடை வந்ததையடுத்து அறையிலிருந்து வெளியேறி முன்பக்கக் கதவை செந்தில்குமார் திறந்தபோது வீட்டின் வாசலில் வடக்கு காவல் நிலையப் காவல்துறையினர் நின்றுள்ளனர். உங்கள் வீட்டில் தீ பிடித்தது குறித்து எதிர் வீட்டில் உள்ளவர் கூறியதால் நாங்கள் வந்தோம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மேலும் தீ பரவாமல் தடுத்து அனைத்தனர். இதுகுறித்து செந்தில்குமார் எதிர் வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் மீது வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லையென கண்ணனும் காவல்துறையினரிடம் கூறியுள்ளாராம். இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நடந்திருக்கும் என்ற கோணத்தில் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.