திருப்பூர்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் 300 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மின் கட்டணத்தைத் குறைக்கக்கோரியும் திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கடந்த ஜூன் 20 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி திருப்பூர் மாநகரில் அரிசிகடை வீதி, கருவம்பாளையம், மிஷின் வீதி, 15 வேலம்பாளையம் உள்ளிட்ட 70 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திருப்பூர் அரிசிக்கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்றவர்கள் இரு சக்கர வாகனத்தைக் கயிறு கட்டி இழுந்து வந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் மாநகர செயலாளர் டி.ஜெயபால்,நிர்வாகிகள் பி.பாலன், ஆர்.சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதே போல், திருப்பூர் மாவட்டம் முழுவதிலும் 300 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்தனர்.