திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் புதன்கிழமை கருப்புப்பட்டை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் புதன்கிழமை முதல் வரும் வெள்ளிக்கிழமை முதல் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம், அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய இடங்களில் 400க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறுகையில், கரோனா பணியின்போது மரணமடைந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள ரூ.50 லட்சம் நிவாரணத்தை வழங்க வேண்டும். தமிழகம் முழுவதிலும் காலியாக உள்ள துணை ஆட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட, வட்டங்களிலும் வரும் வெள்ளிக்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வருவாய் அலுவலர்கள் தெரிவித்தனர்.