வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளின் கரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை, அவர்களை தனிமைப்படுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தயார் நிலையில் உள்ள 1140 தங்கும் அறைகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னைய்யா வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளின் கரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள சவிதா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் அறைகளில் தனிமைப்படுத்தி வைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக தனியார் கல்லூரி வளாகத்தில் 1140 தங்கும் அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்தி வைக்கப்பட உள்ள தங்கும் அறைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னைய்யா வியாழக்கிழமை பார்வையிட்டு தனிமைப்படுத்தி வைக்கப்பட உள்ள பயணிகளுக்கு உணவு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னைய்யா குன்றத்தூர் பேரூராட்சியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோனை செய்யும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) அரசு உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.