கம்பம்: தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில், கடந்த ஐந்து மாதங்களாக நீர்வரத்து இல்லாமலும், நான்கு மாதங்களாக கரோனா தாக்குதலாலும் 200 க்கும் மேலான குடும்பத்தினர் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவி ஆன்மீகம் மற்றும் சுற்றுலாவிற்கு புகழ்பெற்றது. வருடம் முழுவதும் மக்கள் கூட்டம் இருக்கும். மழை இல்லாத காரணத்தால், கடந்த ஜனவரி மாதம் முதல் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் சுருளி அருவி வறண்டது.
அருவியில் தண்ணீர் வந்தால்தான் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும், சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள, தனியார் மண்டபங்கள், விடுதிகள், உணவு கூடங்கள், சாலையோர வியாபாரிகள் என 200 க்கும் மேலானவர்கள் வியாபாரம் செய்வதன் மூலம் வருமானம் கிடைக்கும்.
தற்போதுள்ள நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாதலால் அருவியில் நீர் வரத்து இல்லை, அதை விட கரோனா தொற்றால், சுற்றுலாதலப் பட்டியலில் உள்ள சுருளி அருவி மூடப்பட்டுள்ளது.
இதனால் அருவியை நம்பி உள்ள தனியார் மண்டபம், விடுதிகள், உணவு கடைகள், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ, வேன் வாகன ஓட்டுநர்கள் மற்றும் இங்குள்ள முதியவர்கள் என 200 க்கும் மேலானவர்கள் வருமானம் இன்றி, வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
கரோனா தொற்று தீர்ந்தாலும், இவர்களின் வாழ்வாதாரம் மேலெழுவது மிகவும் சிரமம், மாவட்ட நிர்வாகம் சுருளி அருவியின் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மேம்பட உதவிகள் செய்ய எதிர்பார்க்கின்றனர்.