காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் இரு காவலர்களுக்கு கரோனா நோய்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து டிஎஸ்பி அலுவலகம் மூடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் இரு காவலர்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி அலுவலகம் தற்காலிகமாக தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மூடப்படும் என்றும், தற்காலிகமாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் டிஎஸ்பி அலுவலகம் செயல்படும் என காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலர்கள் இருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்த அலுவலகம் முழுவதும் நகராட்சி துப்புரவு பணியாளர்களால் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. டிஎஸ்பி அலுவலகத்திற்கு அருகில் உள்ள வீடுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் மக்களுக்கு சத்து மாத்திரைகள் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள மாத்திரைகள் ஆகியனவும் வழங்கப்பட்டு வருகிறது.