திருப்பூர்: திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவரின் மனைவிக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
திருப்பூரில் வடக்கு காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வரும் நபரின் மனைவியும் சென்னையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், விடுமுறையில் அவர் திருப்பூர் காவலர் குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு 4 நாள்களுக்கு முன்னர் வந்துள்ளார். இந்த நிலையில், பெண் உதவி ஆய்வாளருக்கு சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, திருப்பூரில் உள்ள காவலர் குடியிருப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. அதே போல், அவரது கணவர் பணியாற்றி வந்த திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திலும் மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காவல் ஆய்வாளர் அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.