புதுச்சேரி: புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு கரோனா பரவல் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்ட பரிசோதனையில் புதுவை மாநிலத்தில் 87 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 72 பேருக்கும், காரைக்காலில் 3 பேருக்கும், மாஹேவில் 9 பேருக்கும் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்று பேர் பிற மாநிலங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்துக்கு முன்பு வரை பாதிப்பு எண்ணிக்கை 30-க்கும் குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் ஒரே நாளில் அதிகபட்சமாக 59 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இப்போது அதையும் தாண்டி 82 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 619 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 388 -ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.