ஈரோடு: ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் குவிந்த மக்கள் மொத்த வியாபாரத்துக்கு காய்கறிகளை வாங்கிச் சென்றனர்
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு ஆர்கேவி ரோட்டில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் ஈரோடு பஸ் நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இங்கே 250க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும் 50க்கும் மேற்பட்ட பழ கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மொத்த வியாபாரமும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை சில்லரை வியாபாரம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் காய்கறி மார்க்கெட் வியாபாரி ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது. மேலும் நேற்று ஒரு நாள் முழுவதும் மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சில்லரை வியாபாரிகள் தங்கள் பொருட்களை எடுத்து காலி செய்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை மொத்த வியாபாரம் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் மொத்த வியாபாரத்தில் காய்கறிகளை வாங்கிச் சென்றனர். உதாரணமாக கால்கிலோ அரை கிலோ காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள், ஐந்து கிலோ அளவுக்கு மொத்தமாக வாங்கி சென்றனர்.
இதுகுறித்து காய்கறி வாங்க வந்த ஒரு பெண் கூறும்போது, நான் சேட் காலனி பகுதியில் வசித்து வருகிறேன். எங்க தெருவில் உள்ள நான்கு வீடுகளில் சேர்த்தும் அவர்களுக்குத் தேவையான காய்கறிகளை நான் வாங்கி செல்கிறேன். 5 கிலோ தக்காளி வாங்கி செல்கிறேன். இதை நாங்கள் பாதி பாதியாக பங்கு போட்டுக் கொள்வோம் என்றார்.
ஒரே நேரத்தில் அனைவரும் கூடுவதை தவிர்க்கவே நாங்கள் ஒன்று பேசி மொத்த வியாபாரத்தில் காய்கறி வாங்கி செல்கிறோம். இந்த காய்கறிகள் எங்களுக்கு ஒரு வாரம் தாக்கு பிடிக்கும். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை எங்கள் தெருவில் உள்ள அடுத்த வீட்டு பெண் எங்களுக்காகக் காய்கறி வாங்க வருவார் என்றார்.