கோவையில் வண்ணப் பொடிகள் இல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக "பாதுகாப்பான ஹோலி" எனும் தலைப்பில் பெண்கள் இணைந்து அசத்தல் ஹோலியை கொண்டாடினர்.
வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை,வழக்கம் போல வடமாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியான கோவையிலும் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் லேடிஸ் கிளப் சார்பாக "பாதுகாப்பான ஹோலி" எனும் தலைப்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக வண்ணப் பொடிகள் மற்றும் வண்ணம் கலந்த நீரை உபயோகபடுத்தாமல் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள லேடிஸ் கிளப் அரங்கில் நடைபெற்ற இதில் பெண்கள் வண்ண ஆடைகள் அணிந்த படி ஹோலியை கொண்டாடினர். ஆர்.எஸ்.புரம் லேடிஸ் கிளப்பின் தலைவர் ஜஸ்பிரீத் கவுர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வண்ணங்களை முன்னிறுத்தும் விதமாக பெண்களுக்கான பிரத்யேக விளையாட்டு, ஆடல், பாடல் போட்டிகள் நடைபெற்றன.
இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சோனாலி பிரதீப் பேசுகையில், சுற்றுசூழலை பாதுகாக்கும் விதமாக வண்ணப் பொடிகள் மற்றும் நீர் பயன்படுத்தாமல் இந்த ஹோலியை கொண்டாடுவதாகவும், தற்போது இயற்கையை காப்பதன் அவசியத்தை அனைவரும் உணரும் வகையில் இது போன்று வண்ண பொடிகள் இல்லாமல் இந்த ஹோலியை கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார்.
விழாவில், லேடிஸ் கிளப் உறுப்பினர்கள் ஷர்மிளா ஷா, ஷீத்தல், ஸ்மிதா படேல், சிகப்பி அண்ணாமலை, சரண்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.